'அணு': பிரதமர் மீது உரிமை மீறல்- பாஜக
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் மீது லோக்சபாவில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும் என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா போட்டுள்ள ரகசிய நிபந்தனைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையை பாஜக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மன்மோகன் சிங் அரசு பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. எனவே மன்மோகன் சிங் அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை அளித்த பிரதமர் மன்மோகன் சிங் மீது உரிமைமீறல் பிரச்சனை கொண்டுவர ஏதுவாக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இனி பதவியில் நீடிக்கக கூடாது. அந்த அருகதையை அது இழந்து விட்டது. உடனடியாக அரசு பதவி விலக வேண்டும். அப்படி செய்தால் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் நேராது.
இது மிக மிக முக்கியமான பிரச்சினை. அமெரிக்க அரசு எழுதியுள்ள கடிதம் சாதாரண கடிதம் அல்ல. புஷ் நிர்வாகத்தின் மிக முக்கிய பொறுப்பான அதிகாரி ஒருவர், அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டிக்கு எழுதியுள்ள கடிதம். இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, புறக்கணித்து விட முடியாது என்றார் சின்ஹா.












Click it and Unblock the Notifications