பீகார் வெள்ள பகுதிகளில் 'லாலு ஹோட்டல்'!
டெல்லி: பீகார் மாநிலம் மாதேபுரா பகுதியில் வெள்ளப் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக ராஷ்டிரிய ஜனதாதள கட்சியினர் லாலு பிரசாத் யாதவ் பெயரில், லாலு போஜனாலயா (லாலு உணவகம்) என்ற உணவகங்களைத் திறந்துள்ளனர்.
பீகாரில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதக்கின்றன.
நிவாரணப் பணிகளில் ஒரு பக்கம் அரசும், பிற கட்சிகளும் ஈடுபட்டுள்ள நிலையில் வெள்ளத்தில் அரசியலைக் கலந்து யார் இதற்கு காரணம் என்ற அரசியல் சண்டையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த மாதேபுரா பகுதியில், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியினர், லாலு பெயரில் உணவகங்களைத் திறந்துள்ளனர். மொத்தம் 5 இடங்களில் இந்த லாலு போஜனாலயா திறக்கப்பட்டுள்ளன.
இங்கு வெள்ளப் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வயிறு முட்டச் சாப்பிட்டுச் செல்லலாம் என லாலு கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இங்கு அளவுச் சாப்பாடே கிடையாது. எல்லாமே அன் லிமிட்டெட்தான் என்று லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்துள்ளார்.
இங்கு கிச்சடி, சாதம், ரொட்டி, காய்கறிகள் என சகலமும் கிடைக்கும் எனவும், வருகிறவர்களுக்கு இல்லை என்று கூறாமல் சாப்பாடு தரப்படும் எனவும் லாலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications