புலிகள் பயங்கர தாக்குதல்-75 ராணுவ வீரர்கள் பலி
வவுனியா: இலங்கையின் வட பகுதியில் உள்ள கிளிநொச்சி அருகே நடந்த கடும் சண்டையில் 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட வீரர்கள் உடல்களையும் அவர்கள் புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் வட பகுதியில் கிளிநொச்சியைச் சுற்றிலும் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாக கருதப்படும் மல்லாவி என்ற இடத்தைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்தது. ஆனால் இதை புலிகள் மறுத்திருந்தனர்.
நாச்சிகுடாவில் 45 பேர் பலி:
இந்த நிலையில், நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்காராயன் ஆகிய பகுதிகளில் ராணுவத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு தாக்குதல்களிலும் 70க்கும் மேற்பட்ட ராணுவத்தினர்கொல்லப்பட்டுள்ளனர்.
நாச்சிகுடா பகுதியில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ராணுவம் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் அதை முறியடித்து விடுதலைப் புலிகள் கொரில்லாத் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த அதிரடித் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராணுவத்தினர் வைத்திருந்த பெருமளவிலான ஆயுதங்களையும் புலிகள் பறிமுதல் செய்தனர்.
வன்னேரியில் 30 பேர் பலி:
வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் இலங்கை ராணுவமந் பலமுனைத் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தடுத்து பதிலடி தாக்குதலில் இறங்கினர்.
இங்கு நடந்த கடும் சண்டையில், 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர். ராணுவத்தினரின் ஆயுதங்களும் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் 8 ஆம், 9 ஆம், 10 ஆம் கட்டைப் பகுதிகளில் இரண்டு முனைகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி தொடங்கி மாலை 6 மணி வரை புலிகளும், ராணுவத்தினரும் மோதினர்.
தங்களது தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவம் பின் வாங்கிச் சென்று விட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications