விநாயகர் சிலைகள் தீவிர பாதுகாப்பு-6,7ம் தேதிகளில் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு சைஸ்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான சிலைகள் தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு இந்து அமைப்புகள் இந்த சிலைகளை வைத்துள்ளன.
சென்னை நகரில் 800 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தியாகராய நகர் பகுதியில்தான் அதிகபட்சமாக 143 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் 98 சிலைகள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன.
3 அடி உயரம் முதல் 14 அடி வரையிலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல திருவட்டீஸ்வரன்பேட்டையில் 14 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது.
6,7ம் தேதிகளில் ஊர்வலம்:
இந்த சிலைகள் 6,7ம் தேதிகளில் ஊர்வலகமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் 130 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலைக்கும் 2 போலீஸ்கார்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை நகரில் 227 சிலைகள் உள்பட மாவட்டம் முழுவதும் 1400 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முந்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பலத்த கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் கருவிகளும் அங்கு பொருத்தப்பட்டுள்ளன.
நெல்லையில் ...
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை எஸ்பி தினகரன் விடுத்துள்ள அறிக்கை:
நெல்லை மாவட்டத்தில் 270 விநாயகர் சிலைகலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தாழையூத்து உள்கோட்டங்களில் 6 சிலைகளும், நாங்குநேரியில் 31 சிலைகளும், அம்பையில் 35 சிலைகளும், சேரன்மகாதேவியில் 26 சிலைகளும், ஆலங்குளத்தில் 46 சிலைகளும், தென்காசியில் 46 சிலைகளும், புளியங்குடியில் 20 சிலைகளும், சங்கரன்கோவிலில் 18 சிலைகளும் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர புதிதாக சிலைகள் வைக்க அனுமதி இல்லை.
விநாயகர் சிலை பாதுகாப்பு குழுவினர் காவல் துறையுடன் இணைந்து தங்கள் பகுதியில் உள்ள சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி மறுக்கப்படும்.
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது காவல் துறையினர் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது பிற மதத்தவர்களை புண்படுத்தும் வகையிலோ, மத துவேஷத்தை துண்டும் விதமாகவோ கோஷம் போடக் கூடாது.
பெட்டி வடிவ ஸ்பீக்கரை தான் பயன்படுத்த வேண்டும். வன்முறையை தூண்டும் வகையிலோ மதக்கலவரங்களை உருவாக்கும் வகையிலோ யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 1500 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர், 100 பயிற்சி காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications