சிறுதாவூர் பங்களாவில் ஜெ. விநாயகர் பூஜை
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னைக்கு அருகில் உள்ள சிறுதாவூர் பங்களாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விநாயகர் பூஜை செய்து வழிபட்டார்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், சிறுதாவூர் என்ற இடத்தில் உள்ள பங்களாவில் அவ்வப்போது ஜெயலலிதா ஓய்வெடுப்பது வழக்கம். இங்கு கடந்த 2005ம் ஆண்டு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா சமீபத்தில் ஊட்டியில் தங்கிவிட்டு பின்னர் சென்னை வந்தார். நேற்று மாலை 4:30 மணிக்கு சிறுதாவூர் பங்களாவிற்கு அவர் வந்தார்.
இரண்டு மணி நேரம் தங்கியிருந்த அவர் பின்னர் 6:30 மணியளவில் திருப்போரூர், கோவளம் வழியாக சென்னை திரும்பினார்.
விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயகருக்கு விசேஷ பூஜைகள் செய்வதற்காக ஜெயலலிதா வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவின் பத்தாம் திருநாளான நேற்று அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா ஆக.25 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் வெள்ளிக்கேடகத்தில் சுவாமி வீதி வலம் வந்தார். இரவில் மூஷிகம், சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை, யானை வாகனங்களில் திருவீதி வலம் வந்தனர்.
ஆக.30ம் தேதி கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்தல் நடந்தது. நேற்று முன் தினம் விநாயகர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது.
சதுர்த்தி விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியை ஒட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. கற்பகவிநாயகருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தங்கக்கவசத்தில் எழுந்தருளி மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
தொடர்ந்து அலங்கார மண்டபத்தில் உற்சவவிநாயகர், சண்டிகேஸ்வரருக்கு தீபாரதனை நடந்தது. யாகசலையில் தீபாரதனை நடந்தது. தங்க மூஷிக வாகனத்தில் உற்சவ விநாயகரும்,பல்லக்குகளில் சண்டிகேஸ்வரர், அங்குசத் தேவர் கோயிலை வலம் வந்து கோயில் குளத்தின் தென்கரையில் எழுந்தருளினார்.
அங்கு, அங்குசத் தேவருக்கு பால்,தயிர், பஞ்சாமிர்தம்,சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. கும்பங்களிலிருந்து புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அங்குசத்தேவர் திருக்குளத்தில் காலை 10.50 மணிக்கு மும்முறை தீர்த்தமாடி தீர்த்தவாரி நிறைவுற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடந்தது. சிவப்புப் பட்டுடுத்தி அங்குசத் தேவர் மற்றும் சுவாமிகள் வலம் வந்து கோயில் அடைந்தனர். மதியம் 1.15 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.
பின்னர் முக்கூருணி மோதகமான 60 கிலோ எடையுள்ள "மெகா' கொழுக்கட்டை மூலவருக்கு நைவேதனம் செய்யப்பட்டது. இக் கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதையடுத்து மகாதீபாரதனை நடந்தது. மாலையில் திருநாள் மண்டபத்தில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவ விநாயகர், மயில்வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்,ரிஷப வாகனங்களில் சோமஸ்கந்தர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.
இரவு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக,தீபாராதனைகள் நடந்து கொடியிறக்கப்பட்டது. திருநாள் மண்டபத்தில் ஐம்பெரும் சுவாமிகளுக்கு தீபாரதனையை தொடர்ந்து திருவீதி உலா நடந்தது. பத்து நாட்கள் நடந்த சதுர்த்தி திருவிழா நிறைவடைந்தது.
யானைகள் செய்த பூஜை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகள் நேற்று விநாயகருக்கு பூஜை செய்து, சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தின.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாம் உலக பிரசித்திப் பெற்றது. தற்போது இங்கு 24 யானைகள் உள்ளன. ஆண்டு தோறும், விநாயகர் சதுர்த்தியின்போது, யானைகள் அங்குள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்வது வழக்கம்.
நேற்று மாலை விநாயகர் கோவிலில், யானைகள் நடத்திய பூஜை பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. முன்னதாக, யானைகள் அலங்கரிக்கப்பட்டு, கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.
அவை கோவில் முன் அணிவகுத்து நின்றன. உதயன், பொம்மன் ஆகிய யானைகள் துதித்கையால் மணி அடித்தபடி, கோவிலை மூன்று முறை வலம் வந்தன. முடிவில், விநாயகர் முன் மண்டியிட்டு வணங்கின. தொடர்ந்து, வரிசையில் நின்ற யானைகளுக்கு கோவில் பூசாரி தீபாராதனை காட்டினார்.
ஒரு குட்டி யானை உட்பட 21 யானைகள் பூஜையில் கலந்து கொண்டன. பூஜைக்கு பின், யானைகளுக்கு பொங்கல், வாழைப்பழம், வெல்லம் வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கும் பொங்கல், பொரி கடலை வழங்கப்பட்டது. பூஜையில் வனத்துறை அலுவலர்கள், முகாம் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications