'லாந்தர்' வெளிச்சத்தில் மதிமுக பொதுக் கூட்டம்
கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மின்வெட்டைக் கண்டித்து மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் லாந்தர் வெளிச்சத்துடன் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டைக் கண்டித்து கூடுவாஞ்சேரியில் மதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டம் மின் விளக்கு ஒளியில் நடைபெறவில்லை. மாறாக கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆளுக்கு ஒரு ஹரிக்கேன் விளக்குடன் (லாந்தர்) வந்திருந்தனர். மேலும் மேடையிலும் லாந்தர் விளக்குகளே வைக்கப்பட்டிருந்தன.
லாந்தர் விளக்கை மைக் முன் வைத்தபடி அந்த வெளிச்சத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு காரணமாக 312 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தின் தொழில் நகரங்கள் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன. பலதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன
இதற்கு பொறுப்பேற்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதவி விலக வேண்டும். மின் வெட்டு மற்றும் மின் பற்றாக்குறை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் சம்பத்.
லாந்தர் விளக்கொளியில் நடந்த இந்த வித்தியாசமான பொதுக் கூட்டம் அப்பகுதியில் பரபரப்பையும், மக்களிடையே வரவேற்பையும் பெற்றது.












Click it and Unblock the Notifications