தமிழக தொகுதி மறு சீரமைப்புக்கு ஒப்புதல்
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் தொகுதி மறு சீரமைப்புப் படி உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகளின் அடிப்படையில் சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்களை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில், நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தொகுதி மறுவரையறை ஆணையம் வழங்கிய பரிந்துரைப்படி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தொகுதி மறுவரையறை ஆணையம் வழங்கிய பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில மாநிலங்களில் உருவாக்கிய புதிய மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளை நடைமுறையில் அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த தொகுதிகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தெரிவித்து விட்டதால் மாற்றியமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்ட விதிகள் 82 மற்றும் 170-ன் கீழ் அவற்றை நடைமுறைப்படுத்த மத்திய மந்திரி சபை முறைப்படி ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், குஜராத், பீகார், டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் புதிய சீரமைக்கப்பட்ட தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன.
தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டாலும், மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், பொதுத் தொகுதிகளாக இதுவரை இருந்து வந்த 402 தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது, 392 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க சிறப்பு நிரந்தர நீதிமன்றம் ஒன்றை டெல்லியில் உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.
பின்னர், மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற விலைவாசி தொடர்பான மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பீகார், அசாம் மற்றும் இதர மாநிலங்களின் வெள்ள நிலவரம் குறித்தும், உணவுதானியங்கள், மற்றும் சமையல் எண்ணை ஆகிய அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட்டது.