For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமருடன் டாடா சந்திப்பு-பேச்சுக்கு மம்தா ரெடி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: சிங்கூரிலிருந்து இடம் பெயருவது குறித்த திட்டத்தில் இருக்கும் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில், டாடாவின் நானா தொழிற்சாலை அருகே திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தொடர் தர்ணா நடத்தி வருகின்றனர். இதனால் தனது தொழிற்சாலையை இழுத்து மூடி விட்டது டாடா. மேலும் சிங்கூரை விட்டு இடம் பெயரப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் நானோ தொழிற்சாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும், குழப்பமாகவும் மாறியுள்ளது.

டாடா நிறுவனம் சிங்கூரை விட்டு போகப் போகிறது என்று அறிவித்தவுடன் அப் பகுதி மக்களிடையே திட்டத்தை எதிர்த்த மம்தா பானர்ஜி மீது கடும் அதிருப்தி பரவியுள்ளது.

400 ஏக்கர் நிலத்துக்காக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை மம்தா இழக்கச் செய்வதாக எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மம்தா பானர்ஜியும் இறங்கி வந்துள்ளார். டாடாவை நான் வெளியேறச் சொல்லவே இல்லை. பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை, டாடா குழுத் தலைவர் ரத்தன் டாடா சந்தித்துப் பேசியுள்ளார். டாடாவுடன், ஆட்டோமொபைல் நிறுவன அதிபர்களான ராகுல் பஜாஜ், பிரிஜ் மோகன் முஞ்சால், ரவி கந்த் ஆகியோரும் பிரதமரை சந்தித்தனர்.

கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. டாடாவும் இதுதொடர்பாக விளக்கவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் நானோ கார் சாலைகளில் ஓடும் என்பதை மட்டும் அவர் உறுதியாகத் கெதரிவித்தார்.

டாடா கூறுகையில், நானோவை திட்டமிட்டபடி ஓட விடுவோம். அதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கேற்ற வழிகளை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

மம்தா மற்றும் போராட்டங்களுக்கு எதிராக டாடா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் டாடா தரப்பும் இந்த விஷயத்தில் இறங்கி வர முயல்வதாகத் தெரிகிறது.

பேச்சு நடத்த மம்தா சம்மதம்:

இந் நிலையில் பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க மேற்கு வங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி இரு தரப்புடனும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.

அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும்படி தலைவர் மம்தா பானர்ஜிக்கு சில தினங்களுக்கு முன் அவர் கடிதம் எழுதினார். இதையேற்று பேச்சுவார்த்தைக்கு மம்தா சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று அரசுக்கும், மம்தாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

ஆனால்... ஒத்திவைப்பு:

ஆனால், காலை நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை அரசின் வேண்டுகோளையடுத்து மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதற்கு மம்தாவும் எதிர்க் கட்சிகளுமே காரணம் என முதல்வர் புத்ததேவ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், முதலில் சிங்கூரில் சாலை மறியலை கைவிட வேண்டும். அதன் பின்னர் பேச்சை தொடங்கலாம் என்று கூறினோம். ஆனால், அதை எதிர்க் கட்சிகள் ஏற்கவில்லை. இந்த சூழலில் பேச்சைத் தொடங்குவது சரியாக இருக்காது என்பதால் தான் அது ஒத்தி வைக்கப்பட்டது என்றார்.

ஆனால், சாலை மறியலில் தனது கட்சியினர் ஈடுபடவில்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X