'சரவணா': உரிமையாளர்களுக்கு முன்ஜாமீன் இல்லை, எந்த நேரமும் கைது?
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 2 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடையின் மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கடையின் உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதி ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இன்று விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீயணைப்புத் துறையினரின் விசாரணை இன்னும் முடியவில்லை. கட்டடத்தில் விதிமீறல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு வக்கீல் கோரினார்.
இதை ஏற்ற நீதிபதி ரகுபதி, சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் விதி மீறல் நடந்திருப்பது ஆவணங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.எனவே முன்ஜாமீன் வழங்க இயலாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications