சொத்து வரி வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா மனு
சென்னை: தனக்கு எதிரான சொத்து வரி வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த 1993-94ம் ஆண்டுகளில் சொத்து வரி செலுத்தவில்லை என்று கூறி வருமானத் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். மேலும் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனை நீதிபதி மோகன்ராம் விசாரித்து வருகிறார்.
தனது மேல் முறையீட்டில், எனக்கு எதிராக சொத்து வரி உதவி ஆணையர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார். ஆனால் வருமானத் துறை சுட்டிக் காட்டிய 12 ஆவணங்கள் அதில் இணைக்கப்படவில்லை. இதனை எழும்பூர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் எனக்கு சம்மன் அனுப்பியது. இது சட்டப்படி தவறு.
30.6.97ல் எனது சொத்தை மதிப்பீடு செய்த வருமானத் துறையினர் ரூ.1,91,993 வரி செலுத்தும்படி கூறியது. ஆனால் 30.8.97ல் நடைபெற்ற சொத்து மதிப்பில் எனக்கு ரூ.24 லட்சம் கடன் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது. இப்படி இருக்கையில் எவ்வாறு சொத்து வரி செலுத்த முடியும். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.