கோவில் விழாவில் மோதல்-காவல் நிலையம் முற்றுகை
அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நல்லமாடசாமி கோவில் கொடை விழா சாமி ஊர்வலத்தின்போது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
கல்லிடைகுறிச்சி குறிஞ்சிபாறை தெருவில் உள்ள நல்லமாடசாமி கோயில் கொடை விழா நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்று மாலை ஆற்றில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
போக்குவரத்தை போலீசார் ஓழுங்குப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது கோட்டை தெருவை சேர்ந்த வெங்கடேஷ், சக்திவேல் ஆகியோர் ஒரு வேனில் வந்தனர்.
தீர்த்தம் எடுத்து வந்த கூட்டத்தின் அருகே வேன் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த குறிஞ்சி பாறை தெருவை சேர்ந்தவர்கள் இருவரையும் தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
வெங்கடேஷ், சக்திவேலை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டை தெருவை சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தை இரவு 9 மணிக்கு முற்றுகையிட்டனர். பஸ் மறியலிலும் ஈடுபட்டனர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் அக்பர்கான் உறுதியளித்தார்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். குறிஞ்சிபாறை தெருவை சேர்ந்த 9 பேரை இது தொடர்பாக விசாரணைக்கு போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
இதனால் அந்த தெருவை சேர்ந்த 100 பேர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அடுத்தடுத்து போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் டிஎஸ்பி ராஜ்மோகன் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இப்பிரச்சினை காரணமாக அங்கு பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications