கலப்பு கல்யாணம்-சிரஞ்சீவிக்கு 'ஜாதி' சிக்கல்!
ஹைதராபாத்: கலப்புத் திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, மணப்பெண் வீட்டாரின் குரோதத்தை சம்பாதித்துக் கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் கே.பத்மாராவின் மகன் சேத்தன். இவருக்கும் இன்னொரு ஜாதியைச் சேர்ந்த நளினி என்கிற 24 வயது பெண் என்ஜீனியருக்கும் கல்யாணம் நடந்தது.
ஹைதராபாத் பிலிம் நகர் கிளப்பில் கடந்த சனிக்கிழமை இந்த திருமணம் நடந்தது. இதில் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். அத்தோடு நில்லாமல், கலப்புத் திருமணங்களின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார். அப்போதுதான் சாதிகளற்ற சமுதாயம் அமையும் எனவும் அடித்துப் பேசினார்.
அது இப்போது அவருக்கு வினையாகியுள்ளது. பெண் ஜாதியைச் சேர்ந்தவர்கள் சிரஞ்சீவியின் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளனராம். இந்தக் கல்யாணம் ஒரு கட்டாயக் கல்யாணம். எங்களது பெண்ணை ஏமாற்றி கட்டி வைத்து விட்டனர். இந்த நிலையில் சிரஞ்சீவி ஜாதிகளற்ற சமுதாயம், கலப்புத் திருமணம், புரட்சி என்றெல்லாம் பேசி எங்களை வேதனைப்படுத்தி விட்டார் என அவர்கள் கூறுகின்றனர்.
இதில் விசேஷம் என்னவென்றால் எழுத்தாளர் பத்மாராவ் சமீபத்தில்தான் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதை கூறும் மணப்பெண் வீட்டார், அரசியல் சுய லாபத்திற்காக இந்த திருமணத்தை சிரஞ்சீவி நடத்தி வைத்துள்ளார். தனது சொந்த மகளின் காதல் கல்யாணத்தை, கலப்பு மணத்தை அங்கீகரிக்காமல் இருப்பவர் சிரஞ்சீவி. இந்த நிலையில் ஊரார் வீட்டுப் பெண்ணின் திருமணத்தை அவர் நடத்தி வைத்திருப்பது சுத்த பகல் வேஷம் என்று கோபத்துடன் கூறுகிறார் நளினியின் தந்தையான சுப்பாராவ்.
இந்தக் கல்யாண கலாட்டா ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications