பாஜக ஆட்சி அமைக்கும்: திருநாவுக்கரசர்
குளித்தலை: காங்கிரஸ் அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதன் விளைவாக, பல மாநில நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்று அக் கட்சியின் தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.
குளித்தலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் அரிசி வழங்கும் முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த அரிசியை எல்லா மக்களும் வாங்குவதில்லை. அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டு விற்கப்படுகிறது.
அரிசியை மட்டும் சாப்பிட முடியாது. அதற்கு தேவையான இதர பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலையில்லா திண்டாட்டம், தீவிரவாதம், வன்முறை, என்று ஏற்கனவே பல சுமைகளை மக்கள் சுமக்கின்றனர். இந்நிலையில் ஏற்பட்டுள்ள மின் வெட்டு மக்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைகள் தேர்தலின்போது கட்டாயம் எதிரொலிக்கும்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதன் விளைவாகத்தான் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற பல மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். அத்வானி பிரதமராவது உறுதி என்றார்.