கோவிலில் பூஜை-பெண்ணுக்கு உதவ நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கோவிலில் பூஜை செய்ய அனுமதி கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், பூஜை செய்ய அந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று கலெக்டருக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், போத்தம்பட்டியைச் சேர்ந்த பினியக்காள் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
துர்க்கையம்மன் கோவிலில் எனது தந்தை பூசாரியாக இருந்தார். அவர் நோய்வாய்பட்டு இருந்த தருணத்தில் நான்தான் கோவிலில் பூசைகள் செய்து வந்தேன். கடந்த 2006ம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட்டார்.
இதையடுத்து என்னை பூஜை செய்ய கூடாது என்று கூறி வாசுதேவன் என்பவரும் சிலரும் அனுமதிக்க மறுக்கின்றனர். என்னை கோவிலில் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனது தீர்ப்பில், இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் பூஜை செய்ய பெண்ணை அனுமதிக்க முடியாது என்று தாசில்தார் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
பெண்கள் பூஜை செய்யக் கூடாது என்று கூறுவது விந்தையாக உள்ளது. மேலும், கடவுளின் சன்னதில் ஆண், பெண் பேதம் கூடாது. கடவுள் முன்பு அனைவரும் சமம். பெண்களும் பூஜை செய்யலாம்.
மனுதாரர் பூஜை செய்ய யாரும் தொந்தரவு தரக் கூடாது. அந்த கோவிலில் அவர் தொடர்ந்து பூஜை செய்யலாம். அதற்கு தேவையான உதவிகளை மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications