மன்மோகன் சிங்குக்கு புஷ், சோனியா வாழ்த்து
என்.எஸ்.ஜி. ஒப்புதல் கிடைத்தவுடன் மன்மோகன் சிங்குடன் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதமரின் தலைமைத்துவத்தை புஷ் மிகவும் பாராட்டினார். அதனால்தான் என்.எஸ்.ஜி.யில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
அதேபோல, அதிபர் புஷ்ஷின் ஈடுபாட்டையும், முயற்சிகளையும் பாராட்டிய பிரதமர் மன்மோகன் சிங்,இந்தியாவுக்காக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க - இந்திய உறவு வலுப்படும்: ரைஸ்
என்.எஸ்.ஜி. அனுமதியின் மூலம் அணு ஆயுதப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் புதிய முன்னேற்றம் ஏற்படும். இந்திய அமெரிக்க உறவுகளில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாக இது அமையும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
வென்றது மன்மோகன் உறுதி: சோனியா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாகவும், திடமாகவும் இருந்து இந்த வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். இந்தியாவின் எரி சக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியம் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார்.
அவரும், இந்திய அதிகாரிகளும், அணு விஞ்ஞானிகளும் மேற்கொண்ட தீவிர முயற்சிகள், நடத்திய பேச்சுவார்த்ைதகள் மூலம் நாட்டுக்கு மிகப் பெரிய பலன் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் சோனியா.
இந்தியாவுக்கு அங்கீகாரம்: பிரணாப் முகர்ஜி
இந்தியாவின் அணு கொள்கைக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் இது. இந்தியாவின் நம்பகத்தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. நவீன அணு தொழில்நுட்பம் கொண்ட நாடாக இந்தியா தற்போது புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
என்.எஸ்.ஜி. ஒப்புதலை அரசுக்கு ஆதரவாக உள்ள கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவை வாழ்த்து தெரிவித்துள்ளன