குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக மோதல்: 36 பேர் கைது
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக ஏற்பட்ட பிரச்சனையில் இரண்டு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சமரசம் செய்ய சென்ற போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கசங்கோட்டை, புதுப்பாளையம் கிராமங்கள். புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிலர் கசங்கோட்டையில் உள்ள குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக அந்த கிராமத்தினர் புகார் கூறினர். இதையடுத்து குடிநீர் தொட்டியை சீரமைக்க அரியலூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.
இதற்கு கசங்கோட்டை கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது. குடிநீர் தொட்டியில் புதுப்பாளையத்தினர் விஷம் கலந்துள்ளனர். மீன்கள் இறந்து மிதிக்கின்றன என்று குற்றம்சாட்டினர்.
இதனால் இரு கிராமத்தினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கற்களை வீசியும், கட்டையால் அடித்தும் இருதரப்பும் மோதிக் கொண்டன. இதில் 30 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருதரப்பையும் சமரசம் செய்தனர். அப்போது புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸாரை தாக்கினர். இதில் போலீஸார் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து 36 பேர் கைது செய்யப்பட்டனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications