புதிய மத்திய அரசு வந்தால் அணு ஒப்பந்தம் ரத்தாகும்: காரத்
டெல்லி: மத்தியில் புதிய அரசு வந்தால், அதன் உதவியுடன் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் காரத் பேசுகையில், என்.எஸ்.ஜி. முன்பு வைக்கப்பட்ட வரைவறிக்கையில் மூன்று முறை திருத்தம் செய்துள்ளனர். கடைசியாக செய்யப்பட்ட திருத்தத்தில் பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளன. இதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன் மூலம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட இந்தியா ஏற்றுக் கொண்டு விட்டது. இதனால் இந்தியாவில் இனிமேல் அணு ஆயுத சோதனையே நடத்த முடியாது என்ற நிலை உருவாகி விட்டது.
மக்கள் கருத்தை அறிந்து, மக்கள் தீர்ப்பைப் பெற்று அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துங்கள் என்று காங்கிரஸை நாங்கள் பலமுறை கேட்டுக் கொண்டோம். ஆனால் அதை நிராகரித்த காங்கிரஸ், அணு குண்டு சோதனை நடத்த மாட்டோம் என தன்னிச்சையான ஒரு உறுதிமொழியை என்.எஸ்.ஜி.யிடமும், அமெரிக்காவிடமும் அளித்துள்ளது.
எங்களது போர் ஓயவில்லை. தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்போம். புதிய மத்திய அரசு வந்தால், அதன் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வோம். அத்தகைய அரசை கொண்டு வருவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications