சிங்கூர் பிரச்சினைக்குத் தீர்வு: மமதா போராட்டம் வாபஸ்

சிங்கூரில் உள்ள டாடா நானோ தொழிற்சாலைக்காக 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான நிலங்களை விவசாயிகளிடமே திருப்பித் தர வேண்டும் என்று கோரி வருகிறார் மமதா.
இதை முன்வைத்து டாடா தொழிற்சாலை உள்ள பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அவரது கட்சியினர் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நானோ தொழிற்சாலை இயங்க முடியாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசுக்கும், மமதா பானர்ஜிக்கும் இடையே சுமூக நிலையை ஏற்படுத்த ஆளுநர் கோபலகிருஷ்ண காந்தி முன்வந்தார். அவரது முன்னிலையில் நேற்று முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யா மற்றும் மமதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் ஆளுநர் காந்தி, புத்ததேவ், மமதா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஆளுநர் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், விவசாயிகளிடமிருந்து எடுக்கப்பட்ட நிலத்தின் கணிசமான பகுதியை (கிட்டத்தட்ட 200 ஏக்கர்) அவர்களிடம் திருப்பித் தர தீர்மானிக்கபப்ட்டுள்ளது. தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நிலங்கள் பெருமளவில் திருப்பித் தரப்படும். இந்த நடவடிக்கை விரைவில் தொடங்கும்.
இந்தப் பணியைக் கண்காணிக்க இன்னும் ஒரு வாரத்திற்குள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார் அவர்.
கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் வரை நானோ ஆலை துணைப் பிரிவுகளில் நடந்து வரும் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.
முன்னதாக நேற்று நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது சுமூக தீர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் ராஜ்பவனிலிருந்து சிபிஎம் தலைமை அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றார் புத்ததேவ். ஆனால் ராஜ்பவனிலிருந்து அவருக்கு வந்த போனில், மமதா சில புதிய நிபந்தனைகளை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டார்.
இதையடுத்து மீண்டும் ராஜ் பவன் விரைந்தார் புத்ததேவ். அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தை இரவு பத்தரை மணியளவில் முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து மமதா மகிழ்ச்சி தெரிவித்தார். இது எங்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி என்றார். பின்னர் அவர் சிங்கூர் புறப்பட்டுச் சென்றார். அவரது கட்சியின் தொடர் தர்ணாவும் நிறுத்தப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நானோ ஆலையில் மீண்டும் பணிகள் தொடங்கவுள்ளன.
டாடா கருத்து கூற மறுப்பு:
பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக தீர்வு குறித்து கருத்து தெரிவித்த டாடா நிறுவனம் மறுத்து விட்டது. இப்போதைக்கு எங்களிடம் எந்தக் கருத்தும் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications