மாவட்டச் செயலாளர்: என்.கே.கே.பிக்கு கல்தா?
ஈரோடு: அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட என்.கே.கே.பி.ராஜா, மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் சாமிநாதன் மாவட்ட செயலாளராக கூடும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னாள் தமிழக கைத்தறி அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா மீது நில மோசடி, மற்றும் ஆள் கடத்தல் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து என்.கே.கே.பி.ராஜா தனது இரண்டாவது மனைவி உமாவின் உறவினர்கள் மூலமாக பாஜகவில் இணையப் போவதாக தகவல் கசிந்தன. ஆனால் அது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், தற்போது அவர் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து வந்து விட்டதாகவும், மாவட்ட செயலாளராக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் பெயர் முன்மொழியப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து திமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
ஸ்டாலினின் மனதில் திருச்சி பொய்யாமொழி இருந்த இடத்தை பிடித்து விட்டார் சாமிநாதன். ஸ்டாலின் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தவறாமல் ஆஜராகி விடுகிறார். மேலும் நெடுஞ்சாலைத்துறையையும் பிரச்சனைகள் இன்றி திறமையாக நிர்வகித்து வருகிறார். அதனால் சாமிநாதன் மீது திமுக தலைமைக்கு நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியையும் சாமிநாதனுக்கு திமுக தலைமையே முன் வந்து கொடுக்கும் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ராஜாவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் கட்சிக்கு கெட்ட பெயர் வருவதோடு, திமுகவில் உள்ள சிலருக்கு பிடிப்பின்றி போய்விடும். தற்போது, நகரம், ஒன்றியம், கிளை தேர்தல்கள் நடைபெற்று வருகி்றது.
மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும்போது ராஜாவுக்கு பதில் வெள்ளகோவில் சாமிநாதனை திமுக தலைமையே களம் இறக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.
ஆனால் மாவட்டச் செயலாளர் பதவியை எப்படியும் தக்க வைத்தே தீருவது என்று தீவிரமாக செல்பட்டு வருகிறாராம் ராஜா. எனவே, மா.செ. தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications