ஆன்லைனில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்
சென்னை: இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.6 கோடியே 57 லட்சத்தில் சத்துணவு கூடங்கள், மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட 42 புதிய பணிகள் தொடக்க விழாவும், மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பை வழங்கும் திட்டம், இணைய தளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இலவசமாக பெறும் திட்டம் ஆகியவற்றின் தொடக்க விழாவும் புரசைவாக்கத்தில் உள்ள பெருமாள்பேட்டை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி முன்னிலை வகித்தார். புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கலைஞர் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டப் பணிகளை தமிழகத்திலும், சென்னை மாநகராட்சியிலும் செயல்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என்ற திட்டத்தை அறிவித்தபோது ஏமாற்று வேலை என எதிர்கட்சியினர் கிண்டல் செய்தனர். இன்று அதையும் தாண்டி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் வரும் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்படி மக்களுக்காக பணி செய்து வரும் இந்த ஆட்சிக்கும் முதல்வருக்கும் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இணையதளம் மூலம் இலவசமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறும் திட்டத்தை இங்கே தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தும் சென்னையில் பிறந்த மற்றும் இறந்தவர்களின் சான்றிதழ்களை பெற முடியும். இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுகிறார்கள். இது மகத்தான சாதனை, என்றார் ஸ்டாலின்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் 200 கர்ப்பிணிகளுக்கு தலா ரு.6,000 வீதம் 12 லட்சம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 9.39 லட்சத்துக்கான காசோலைகளையும் அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.












Click it and Unblock the Notifications