அடுத்தபடியாக, ஷாருக் கான்!

மகாராஷ்டிர மாநில அரசியல்வாதிகளுக்கு பொழுது போகவில்லை போலும். மொழிப் பிரச்சினை, மாநிலப் பிரச்சினையைக் கிளப்பி விட்டு வெந்த புண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தி மொழி பேசுவோருக்கு எதிராக முதலில் பிரச்சினையைக் கிளப்பியது ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சி. இதனால் அக்கட்சிக்கு செல்வாக்கு எகிறி விடப் போகிறதே என்ற பயத்தில் சிவசேனாவும் இந்திக்காரர்களை தன் பங்குக்கு தாக்கியது.
பின்னர் ராஜ் தாக்கரே அமிதாப் பச்சனைக் குறி வைத்தார். பதிலுக்கு சிவசேனாவும் அமிதாப்பைத் தாக்கியது.
இதைப் பிடித்துக் கொண்ட ராஜ் தாக்கரே, அடுத்தடுத்து மராத்தி மொழியைக் காக்கிறோம் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளை அடுக்கடுக்காக கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
லேட்டஸ்டாக அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் இந்தியில் பேசுவதாக கூறியதை பெரும் பிரச்சினையாக்கி மன்னிப்பும் கேட்க வைத்து விட்டார்கள்.
இப்படி ராஜ் தாக்கரே அடுத்தடுத்து ஸ்கோர் செய்து கொண்டிருப்பதால் டென்ஷன் ஆகியுள்ள சிவசேனா ஷாருக் கானை தற்போது வம்புக்கு இழுத்துள்ளது.
சிவ சேனாவின் சாமனா பத்திரிகையில் ஷாருக்கானை குறிவைத்து பால் தாக்கரே கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் டெல்லியைச் சேர்ந்தவன் என்று ஷாருக்கான் கூறியுள்ளார். டெல்லியைச் சேர்ந்தவர் என்றால் மகாராஷ்டிராவில் ஏன் அவர் இருக்க வேண்டும்? பணமும், புகழும் பெறுவதற்காக நீங்கள் மகாராஷ்டிராவுக்கு வருவீர்கள். உங்களது நிலை உயர்ந்ததும், உங்களின் பூர்வீகத்தை பற்றி பேசத் தொடங்கி விடுவீர்கள். மகாராஷ்டிர மக்கள் அதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது.
உங்களுக்கு மாநில பற்று இருக்கும்போது, எங்களுக்கு இருக்கக் கூடாதா?.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு கடந்த 60 ஆண்டுகளாக நடக்கிறது. அங்கு இந்தி மொழி செய்திகளுக்கும், படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில், இந்தி பேசினால் கொலை செய்து விடுகின்றனர்.
கலைத்துறைக்கு வந்த பிறகு அமிதாப் பச்சன் எந்த மாநிலத்தையும், மொழியையும் சேர்ந்தவரில்லை. அவர் ஒரு சிறந்த நடிகர். ஆனால் அவரது மனைவி ஜெயா பச்சன், நாங்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கூறுவது எந்த வகையில் சரி என்று கேள்வி எழுப்பியுள்ளார் பால் தாக்கரே.
சிவசேனாவும், எம்.என்.எஸ்.ஸும் இப்படி இந்தி பேசுவோருக்கு எதிராகவும், சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு எதிராகவும் மாறி மாறி விஷத்தைக் கக்கிக் கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கை வாருகிறோம் என்ற பெயரில் தமிழகத்தில் இந்தி தடை செய்யப்பட்டுள்ளது, இந்தி படங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று மகா பொய் ஒன்றையும் தட்டி விட்டுள்ளார் பால்தாக்கரே.
மும்பையைத் தாண்டி வெளியில் எங்கும் போகாமல் இருந்தால் இப்படித்தான் பேச முடியும்!.












Click it and Unblock the Notifications