போலீஸை கண்டித்து சிபிஐ தொடர் உண்ணாவிரதம்
திருத்துறைபூண்டி: போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருத்துறைபூண்டியில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைபூண்டி நகர செயலாளர் முத்துகுமரன், நகர குழு உறுப்பினர் ராமலிங்கம், இளைஞர் மன்ற நகர செயலாளர் லெனின் ஆகியோர் மீது கடந்த மாதம் 6ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்தும் நேற்று முதல் திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், ஒன்றிய, நகர, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.
உண்ணாவிரதத்திற்கு எம்எல்ஏ உலகநாதன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.