புலிகள் தாக்குதலில் 2 இந்தியர்கள் காயம்-அதிகாரிகள் இலங்கை விரைவு

நேற்று விடுதலைப் புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்தியா வழங்கிய இந்திரா வகை ரேடார்கள் பொருத்தப்பட்டிருந்த மையம் பெரும் சேதமடைந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த தாகூர் மற்றும் ரூப் ஆகிய இருஇந்திய பொறியாளர்கள் படுகாயமடைந்தனர்.
இருவரும் இலங்கை பொறியாளர்களுக்கு ரேடார்களை இயக்குவது தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் கொழும்பில்உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரேடார் மைய சேதம் மற்றும் இந்தியப் பொறியாளர்களின் நிலை குறித்து ஆராய இந்தியாவிலிருந்து உயர் மட்டக்குழு கொழும்பு விரைவதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னி படைத்தளத்திற்கும் இக்குழு செல்லவுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து இந்தியத் தரப்பிலோ அல்லது இலங்கை அரசுத் தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
வட கிழக்கு இலங்கையில், 265 இந்திய ராணுவப் பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப அதிகாரிகள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications