புதுவையில் குண்டர் சட்டம்: அமைச்சர் வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிகளும், தீவிரவாதிகளும் புதுச்சேரிக்கு வருவதால் இங்கு கொலை, கொள்ளை போன்ற வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புதுசேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற குண்டர் சட்டம் அவசியம் தேவை. தற்போது முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. குண்டர் சட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
புதுச்சேரியில் ரூ.354 கோடி நிதி பற்றாக்குறை இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறேன்.
எதிர்க் கட்சியை எதிரியாக கருதப்படுவதாக புதுச்சேரி கம்யூனிஸ்ட் தலைவர், ஜனாதிபதிக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டுமானால் இவ்வாறு நடந்து கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. எதிர்க்கட்சியினருக்கு புதுச்சேரி அரசு எந்த ஒரு சலுகையும் தரக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications