விஸ்வரூபம் எடுக்கும் திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்
சேலம்: சேலம் கந்தம்பட்டி திரௌபதி அம்மன் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த தலித் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு தரப்பினர் கடந்த மூன்று தினங்களாக ஊரைக் காலி செய்து மலையில் வசித்து வருகின்றனர். இதனால் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
சேலம் கந்தம்பட்டியில் உள்ளது திரௌபதி அம்மன் கோயில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆதி திராவிட மக்கள் வழிபாடு நடத்தவும், கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த முயன்றனர்.
இதனால் பிரச்சனை வெடித்தது. இருதரப்பையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், கோவிலை பூட்டி சீல் வைத்தது.
இதை எதிர்த்தும், வழிபாடு நடத்த உரிமை வழங்க வேண்டும என்று கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஆதி திராவிட மக்களும் இந்த கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 8ம் தேதி அதிகாரிகள் முன்னிலையில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு, தலித் பகுதி மக்கள் ஊர்த் தலைவர் கணேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அர்ச்சனை தட்டுகள் ஏந்தி கோயிலுக்குள் சென்று வழிபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் பிரிவினர் அன்றைய தினம் இரவே ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் உள்ள சித்தர் குகைக்கு சென்றனர். இதையடுத்து சேலம் ஆர்டிஓ பாலகுருமூர்த்தி அவர்களை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
அதை ஏற்க மறுத்த மக்கள், கடந்த 3 தினங்களாக மலையிலேயே சமைத்து சாப்பிட்டு தங்கி வருகின்றனர். மலையில் வசிக்கும் போராட்டத்தை அவர்கள் தொடர்வதால் பிரச்சனை பெரிதாகி வருகிறது.












Click it and Unblock the Notifications