வைக்கோல் லாரியுடன் கடை எரிந்து ரூ.7 லட்சம் சேதம்!

சங்கரன்கோவில் அருகேயுள்ள வாசுதேவநல்லூரிலிருந்து கேரளா மாநிலம் கொல்லத்திற்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதிகாலை 2 மணியளவில் லாரியை புளியரை நெடுத்தெருவை சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டி சென்றார். புளியரை சோதனைச் சாவடி அருகே லாரி சென்றபோது திடீரென தீப்பிடித்தது. இந்த தீயினால் லாரி மற்றும் அதில் இருந்த வைக்கோல்கள் கொளுத்துவிட்டு எரிந்தன.
தகவல் கிடைத்ததும் புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
செங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தளவுக்கு தீ கொளுத்துவிட்டு எரிந்தது. இதன்பின்னர் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 தீயணைப்பு நிலைய வீரர்களாலும் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் லாரி மற்றும் வைக்கோல் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. வைக்கோல் எரிந்து அவற்றின் கரித்துகள்கள் காற்றில் பறந்து அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் கூரைகளின் மீது படிந்து கிடந்தன.
மேலும் அப்பகுதியில் கடை நடத்தி வந்த தங்கம்மா என்பவரது பெட்டிக்கடையும் தீயில் எரிந்து நாசமானது. லாரி, கடை உள்பட மொத்த சேத மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications