நகைக்கடை வேனை மறித்து ரூ.3 கோடி கொள்ளை- பனை மரத்தில் ரூ.75 லட்சம்!

கடந்த மாதம் 10ம் தேதி திருச்சி மங்கள் அண்ட் மங்கள் நகை கடை ஊழியர்கள் நகை வாங்க ரூ. 3 கோடியுடன் சென்னைக்கு வேனில் சென்றனர்.
வேப்பூர் என்ற இடத்தில் போலீஸ் உடை அணிந்த 6 பேர் வேனை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் மங்கள் அண்ட் மங்கள் நகைக்கடையின் முன்னாள் ஊழியர் சுந்தர் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தந்த தகவலின்படி திருச்சி வாழவந்தான்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா, கடலூரை சேர்ந்த கூலிப்படை தலைவன் வகிலா ஆகியோருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பிருப்பது தெரிந்தது.
அவர்களையும் தனிப்படை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், சுந்தரின் சொந்த ஊரான திருவெறும்பூர் காட்டுப் பகுதியில் ஒரு பனை மரத்தின் உச்சியில் மட்டைகளுக்கு இடையில், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து பனை மரத்தின் உச்சியில் பாலித்தீன் பையில் போட்டு வைக்கப்பட்டிருந்த ரூ.75 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்களையும் பிடித்து விசாரித்தால் மீதி பணம் குறித்து தெரிய வரும்.












Click it and Unblock the Notifications