அதிமுகவுடன் இன்னும் பேசவில்லை: சிபிஐ
சிவகங்கை:கூட்டணி குறித்து அதிமுக உள்பட எந்த கட்சியுடனும் இதுவரை பேசவில்லை. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பின்தங்கியுள்ள முத்தரையர் சமூகத்தினரை பழங்குடியினராக அறிவித்து, சிறப்பு திட்டங்கள் மூலம் வீட்டுமனை, குழும வீடுகள் வழங்க வேண்டும்.
ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி என்ற அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தவில்லை. அரசின் இந்த திட்டம் நலிந்தோரின் பிரச்சனை தீர்த்துவிடாது. எனவே விலைவாசியை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
ராஜஸ்தானில் சமீபத்தில் 16 மின் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு திட்டங்களை திருச்சி பெல் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. ஆனால் பெல் நிறுவனத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளவில்லை.
முன்பு தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி இருந்தது. தமிழகத்தில் 3 புதிய வாகன தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதாகவும், வழங்க முடியாத பட்சத்தில் இழப்பீடு கொடுப்பதாகவும் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்த விபரத்தை பகிரங்கமாக அரசு வெளியிட வேண்டும். அன்னிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு மின் தடையையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
தற்போது திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. புதிய கூட்டணி குறித்து அதிமுக உள்பட எந்த கட்சியுடனும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications