அதிமுகவை இழுக்க 'பீலர்களை' அனுப்பும் பாஜக!

பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று பெங்களூரில் நடந்தது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத்திடம், மீண்டும் திமுகவை கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், ராமர் பால விவகாரத்தில் திமுக எடுத்த முடிவின் மூலம் அக்கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே அடிப்படையிலேயே வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவாகி விட்டது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் திமுக வருமா என்பது ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி. திமுக இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ளது.
ராமர் பாலம் தொடர்பாக கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள் பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை அதிகப்படுத்தியுள்ளது. முன்பு திமுகவுடன் இணைந்திருந்தது நடந்து போன கதை என்றார் அவர்.
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்வதற்காக தூதுவர்கள் சிலரை பாஜக அனுப்பியுள்ளதாகவும் பிரசாத் சூசகமாக தெரிவித்தார். அதற்கு அதிமுக தரப்பிலிருந்து பதில் வந்ததா என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் லோச்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக, விரைவிலேயே அதிமுகவை கூட்டணிக்கு இழுக்க தீவிரமாக இறங்கியுள்ளதையே பிரசாத்தின் பேட்டி தெளிவுபடுத்தியுள்ளது.
அத்வானி பிரதமராவது உறுதி: ராஜ்நாத்
இதற்கிடையே, செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், நாட்டின் பொருளாதாரம், வெளியுறவு, தீவிரவாதம் போன்ற விஷயங்களில் ஐக்கிய முற்போக்கு அரசு தோற்றுவிட்டது. இந்த அரசை விரட்டியடிக்க தயாராகுங்கள். ஆட்சி பீடத்தில் பாஜக அமர வேண்டும். வெற்றி பெறுவதுதான் நமது குறிக்கோள். எதிர்காலம் நம்முடையது. நமது குறிக்கோள் தெளிவாக உள்ளது.
அத்வானியை நாட்டின் பிரதமராக்குவது உறுதி. அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஐக்கிய முற்போக்கு அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். மக்களை மனமாற்றம் அடைய செய்யும் யாகத்தை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல், அதைத் தொடர்ந்து டெல்லி, மிசோரம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் தேர்தல்கள் நடக்க உள்ளன. மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்க ஓய்வின்றி உழைக்க வேண்டும். அதற்காக முழு வீச்சில் பணியாற்ற வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். விலைவாசி உயர்வு, பண வீக்கம், விவசாயிகள் தற்கொலை, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, அமெரிக்கா உடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் நாட்டையும், நாட்டின் பாதுகாப்பையும் விற்றது போன்ற இந்த அரசின் தோல்விகளை பிரசாரத்தின்போது விமர்சிக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
'ராகு' போக காத்திருந்த பாஜக!
முன்னதாக தேசிய செயற்குழுக் கூட்டத்தின் தொடக்கம் சற்று தாமதப்பட்டது. ராகு காலம் போகட்டும் என்றுகாத்திருந்ததால் ஏற்பட்ட தாமதம் இது.
இன்று காலை 11.55 மணிக்கு தேசியசெயற்குழுவின் 3 நாள் கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அப்போது ராகு காலம் இருந்ததால் திட்டமிட்டபடி கூட்டம் தொடங்கப்படவில்லை. ராகுகாலம் முடிந்தவுடன்தான் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கினர்.
அனைவரையும் கவர்ந்த எதியூரப்பா
தேசியசெயற்குழுக் கூட்டத்திற்கு வந்த அனைவரும் எதியூரப்பாவை ஸ்பெஷலாக பாராட்டினர். தென்னகத்தில் பாஜக ஆட்சி காலூன்ற காரணமாக இருந்தவர் என்பதால் இந்த பாராட்டு.
மைசூர் தலைப்பாகையுடன் தேசியத் தலைவர்களுடன் எதியூரப்பாவும் முதன்மை வரிசையில் அமர்ந்திருந்தார்.












Click it and Unblock the Notifications