மும்பை போலீஸ் இணை ஆணையர் மீது பால் தாக்கரே பாய்ச்சல்
புனே: மும்பை மாநகரம் யாருடைய முப்பாட்டன் சொத்தும் அல்ல என்று கூறிய மும்பை மாநகர போலீஸ் இணை ஆணையர் கே.எல். பிரசாத்துக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன் குடும்பத்தை சரமாரியாக போட்டுத் தாக்கி வருகின்றனர் பால் தாக்கரே குடும்பத்தினர். அவரது மருமகன் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தொடர்ந்து அமிதாப்பச்சனை தாக்கி வருகின்றனர். அதேபோல பால்தாக்கரேவின் சிவசேனாவும் அவ்வப்போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அமிதாப்பை சீண்டி வருகிறது.
சமீபத்தில் ஷாருக் கான் மீதும் பால்தாக்கரே பாய்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது மும்பை போலீஸ் இணை ஆணையர் பிரசாத் மீது பாய்ந்திருக்கிறார் பால் தாக்கரே.
மும்பை மாநகரம் யாருடைய முப்பாட்டன் சொத்தும் அல்ல. அது அனைவருக்கும் உரிமையானது, யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது என்று கூறியிருந்தார் பிரசாத். இதற்கு பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சாம்னா இதழில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், மும்பையைச் சேர்ந்த எந்த காவல்துறை அதிகாரியும் இப்படி ஒரு கருத்தை தெரிவித்ததில்லை.
முதலில் பிரசாத்துக்கு இந்தியே பேசத் தெரியாது. தப்புத் தப்பாகத்தான் பேசுவார். அவர் மும்பை குறித்து கருத்து கூற அருகதை இல்லை. மகாராஷ்டிர அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக மராத்தி கற்க வேண்டும். அதற்கான உத்தரவை மகாராஷ்டிர அரசு பிறப்பிக்க வேண்டும்.
இவர்கள் எல்லாம் மகாராஷ்டிராவில் வாழ்ந்து கொண்டு அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தையும், மராத்தி மொழியையும் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மும்பையை மகாராஷ்டிராவை விட்டு பிரிக்க முயற்சிகள் நடக்கின்றன. இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்த நகர் மீது மராத்தி மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதற்காக இறுதி வரை சிவசேனா பாடுபடும் என்று கூறியுள்ளார் தாக்கரே.












Click it and Unblock the Notifications