டாடா நானோ ஆலையை கர்நாடகத்தில் அமைக்க எதியூரப்பா அழைப்பு

டெல்லியிலிருந்து வந்திருந்த செய்தியாளர்களிடம் பெங்களூரில் பேசிய முதல்வர் எதியூரப்பா, டாடா நானோ தொழிற்சாலைக்குத் தேவையான சூழல் கர்நாடகத்தில் உள்ளது. அவர்களுக்குத் தேவையான இடத்தைத் தர கர்நாடக அரசு தயாராக உள்ளது.
இருப்பினும் விவசாயிகளிடமிருந்து பெறும் நிலத்திற்கு உரிய தொகையை டாடா நிறுவனமே பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் திட்டத்தை நிறைவேற்றி முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நிலத்தில் 25 சதவீத அளவுக்கு மாற்று இடத்தை மேம்படுத்தி அவர்கள் தர வேண்டும்.
சிங்கூர் பிரச்சினையிலிருந்து நாங்களும் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் அதே நேரம், விவசாயிகள் ஏமாற்றப்படாமலும் காக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் எதியூரப்பா.
ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ தொழிற்சாலையை தங்களது மாநிலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என ஆந்திரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இலங்கையும் கூட அழைப்பு விடுத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications