விஜயகாந்த்தை கூட்டணிக்கு கூப்பிடவில்லை: தங்கபாலு

தனது பேட்டிகளின்போதெல்லாம் விஜயகாந்த் எனது நண்பர் என்று கூறி வருகிறார் தங்கபாலு. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு நான் அவரை ஒருபோதும் கூப்பிடவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
கோவையில் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படும் வகையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா எந்த வித உதவியும் செய்யவில்லை. ஆனால் எதிர்கட்சி வரிசையில் இருப்பதால் வைகோ ஏதேதோ கூறுகிறார்.
மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கும், பாதுகாப்புத்துறை ஆலோசகர் நாராயணனும் இலங்கை அதிபரை சந்தித்து விரிவாக பேசியுள்ளனர்.
இந்திய எல்லையில் மட்டுமின்றி, இலங்கை கடல் எல்லையிலும் கூட இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க ஏதுவாக அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நான் கூறவில்லை. அவர் எனது நண்பர் என்று தான் கூறினேன்.
விஜயகாந்த் மட்டும் அல்ல, சோனியா தலைமையை ஏற்கும் மதசார்பற்ற கட்சிகளை எங்கள் கூட்டணிக்கு கொண்டு செல்வது மாநில தலைவர் என்ற முறையில் என்னுடைய பணிதான். ஆனால் கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்ய வேண்டியது அகில இந்திய தலைமை தான்.
தமிழக அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதை தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதி முடிவை சோனியா எடுப்பார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications