For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக ஆட்சி அமைத்தால் பொடா கொண்டு வரப்படும்: அத்வானி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொடா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார். மேலும் மோடியின் எச்சரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் டெல்லி தாக்குதல் என்றும் மத்திய அரசை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரில் நடந்த விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்து அத்வானி பேசுகையில், டெல்லியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். டெல்லியை தாக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பிரதமருக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தகவல் கொடுத்தும் சதித்திட்டத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது.

குஜராத் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் அம்மாநில போலீசார் நடத்திய விசாரணையின்போது டெல்லியை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. 10 நாட்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது இத் தகவலை தெரிவித்தார்.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டதால் இப்போது டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடம் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிப்பதாலேயே நாட்டில் பயங்கரவாதம் பெருகி வருகிறது.

அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து வருவதால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க பிரதமர் மன்மோகன் சிங் தயாரா? இது பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நான் விடுக்கும் சவாலாகும்.

இதுவரை பதவி வகித்த பிரதமர்களில் மன்மோகன் சிங்தான் மிகவும் பலவீனமான பிரதமர். இவருக்கு முன்பு அந்த பதவியில் இருந்தவர்கள் ஏதோ சில சாதனைகளை செய்துள்ளனர். ஆனால் மன்மோகன் சிங்கின் சாதனை என்பது குறித்து சொல்லப்பட எதுவுமே இல்லை.

உள்நாட்டு பாதுகாப்பு, வேளாண் நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை திறம்பட கையாள்வதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. பாதுகாப்பு விஷயத்திலும் மத்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது என்பதற்கு டெல்லியில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவங்களே உதாரணமாக திகழ்கிறது.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான பொடா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றார் அத்வானி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X