டெல்லி குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக தப்பிய அபிஷேக்
மும்பை: டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பின்போது நடிகர் அபிஷேக் பச்சன் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது.
டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தபோது அந்த வழியாக செல்ல முயன்றுள்ளார் அபிஷேக் பச்சன். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததைப் பார்த்து திரும்பி விட்டாராம். இந்தத் தகவலை அவரது தந்தையும், சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் தனது 'பிளாக்'கில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அமிதாப் எழுதியுள்ளதாவது: கன்னாட் பிளேஸ் பகுதியில் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் அந்தப் பாதை வழியாக செல்ல முயன்றுள்ளார் அபிஷேக். ஆனால் போக்குவரத்து நெரிசலைப் பார்த்து திரும்பி விட்டார்.
ஒரு வேளை அவர் குண்டுவெடிப்புக்கு முன்பு அந்தப் பாதை வழியாக சென்றிருந்தால் நிச்சயம் குண்டுவெடிப்பில் சிக்கியிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். வெடிகுண்டுச் சம்பவத்திற்குப் பின்னர் எனக்குப் போன் செய்து தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் இந்த வெடிகுண்டு சம்பவத்தால் யாருக்கு என்ன பலன் கிடைத்து விட்டது?. பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன. ஒன்றும் தெரியாத பலர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர், படுகாயமுற்றுள்ளனர். இதனால் யார் என்ன சாதித்து விட்டார்கள்?.
டெல்லி குண்டுவெடிப்பு என்னை மிகவும் சோகமாக்கியது. மனதெல்லாம் வலித்தது.
நாம் எல்லாம் மிகவும் கடினமான கால கட்டத்தில் உள்ளோம். நமது வருங்காலத் தலைமுறையினருக்கு என்ன மாதிரியான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. நம்மைப் பற்றியும் நாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். அதுதான் இப்போது அனைவருக்கும் தேவையானது என்று கூறியுள்ளார் அமிதாப்.