பணவீக்கம் மேலும் குறையும்-ரங்கராஜன் ஜோசியம்
டெல்லி: வரும் டிசம்பருக்குள் 14 சதவிகித பணவீக்கத்தை நாடு சந்திக்கும் என கடந்த மாதம் கூறிய முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர், எம்பியான கையோடு பணவீக்கம் 10 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என பேட்டியளித்துள்ளார்.
ராஜ்யசபா நியமன எம்பியாகி அரசியல்வாதியாகிவிட்டதாலோ என்னவோ மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் முன்னாள் தலைவராக இருந்த ரங்கராஜன் கடந்த மாதம் நிருபர்களைச் சந்தித்தபோது, பணவீக்கம் இனி குறைய வாய்ப்பில்லை என்றும், வரும் டிசம்பருக்குள் இன்னும் உயர்ந்து 13 முதல் 14 சதவிகிதம் வரை போகும் என்றும் சொல்லி கிலியூட்டினார்.
இந்நிலையில், இந்திய தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் அவர் நேற்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இந்தியப் பணவீக்கம் 10 சதவிகிதத்துக்குள் வந்துவிடும் என நம்புகிறேன். கடந்த ஆண்டு டிசம்பரில் பணவீக்கம் சாதாரண நிலையில் இருந்தது. அதனால்தான் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே உயரத் தொடங்கிவிட்டது.
எப்போதுமே முந்தைய ஆண்டுகளில் பணவீக்கம் குறைவாக இருந்தால், நடப்பு ஆண்டு நிச்சயம் உயரும் என்பது, பணவீக்கத்தின் அடிப்படை விதி (!). இதனை அடிப்படை விளைவு என்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால், இந்த டிசம்பரில் பணவீக்கம் மீண்டும் குறையும்(!!) என்றார்.
பணவீக்கம் இந்த வாரம் 12.1 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.