பூரண மதுவிலக்கு அறிவித்தால் பாராட்டுவேன்: ராமதாஸ்
தர்மபுரி: அக்டோபர் 2ம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தால், அவரது வீடு தேடிச் சென்று பாராட்டுவேன். இல்லாவிட்டால் 2011ல் பாமக ஆட்சியில் மது ஒழிப்புக்காக முதல் கையெழுத்திடப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
அக்டோபர் 2ம் தேதி மக்களை கவரும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்போவதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மக்களை காக்க திட்டங்களை கொண்டு வர வேண்டும். இதை நாங்கள் சொல்வதாக கருணாநிதி நினைக்க வேண்டாம்.
அண்ணா நூற்றாண்டு கொண்டாடும் சமயத்தில், மது ஒழிப்பில் அண்ணா எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதை நினைக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏற்படும் வருமான இழப்பை விட தாய்மார்களின் மகிழ்ச்சியே அரசுக்கு முக்கியம் என்று அண்ணா கூறியுள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக கருணாநிதி அறிவித்தால், அவரது வீடு தேடிச் சென்று பாராட்டுவேன். இல்லாவிட்டால் 2011ல் பாமக ஆட்சியில் மது ஒழிப்புக்காக முதல் கையெழுத்திடப்படும். 2011ல் பாமக தலைமையில் அணி உருவாகும் வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.
தமிழ் ஈழம் மலர ஆதரவு தருவோம் என்று 1985ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொதுக் கூட்டங்களை நடத்தி உறுதி அளித்தவர் கருணாநிதி. தற்போது ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் மௌனம் சாதிக்கிறார்.
ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழக கர்நாடக மாநிலங்கள் இணைந்து சர்வே நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாடு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதற்காக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
மாநில அரசு சார்பில் பொறியியல், கலை, அறிவியல், பல் மருத்துவம், நர்சிஸ் உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் எத்தனை தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் சுயநிதி கல்லூரிகளின் பெருகி வருகின்றனர. அதனால்தான் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி வருகிறோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications