For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக். 2 முதல் ரேசன் கடையி்ல் ரூ. 50க்கு மளிகை சாமான்!

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற புரட்சிகரமான திட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் மானிய விலையில் மளிகைப் பொருட்கள் என்ற பெயரில் புதிய திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் தற்போது கிலோ அரிசி ரூ. 2 ரூபாய்க்கு தரப்படுவதை மாற்றி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என செப்டம்பர் 15ம் தேதியன்று, அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு முதல் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டம் இன்று தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் நேற்று இன்னொரு முக்கிய திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தினசரி சமையலுக்கு பயன்படும் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, மிளகுப் பொடி, கடுகு, மிளகு, ஜீரகம் உள்ளிட்டவை பாலிதீன் பைகளில் போட்டு மானிய விலையில் ரேஷன் கடைகளில் அக்டோபர் 2ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும்.

இந்தத் திட்டத்திற்கு மானிய விலையில் மளிகைப் பொருள்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வெளி மார்க்கெட்டில் இந்த மளிகைப் பொருட்களுக்கு ரூ. 67 செலவாகும். இதை நியாய விலைக் கடைகளில் ரூ. 50க்கு வழங்கவுள்ளோம். இந்த மளிகைப் பொருட்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத் தேவைக்கு சரியாக இருக்கும்.

காந்தி ஜெயந்தியன்று தொடங்கும் இந்தத் திட்டத்தால், 1.86 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பயன் அடைவார்கள். மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 100 கோடி செலவாகும்.

ஏழைகளுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் விலைவாசி பாதிப்பிலிருந்து மக்கள் நிம்மதி பெற முடியும். ஏற்கனவே இதுபோன்ற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் சிறப்புத் திட்டத்தின் மூலம் இவை மக்களுக்கு வழங்கப்படும் என்றார் முதல்வர்.

மானிய விலையில் மளிகைப் பொருட்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுக்கான விலைப் பட்டியலையும் முதல்வர் வெளியிட்டார். அதன் விவரம்:

250 கிராம் மிளகாய் தூள் - ரூ. 25.50

50 கிராம் மஞ்சள் தூள் - ரூ. 3.

75 கிராம் மல்லிப் பொடி - ரூ. 12.75

75 கிராம் கடலைப் பருப்பு - ரூ. 3.75

25 கிராம் வெந்தயம் - ரூ. 3.

25 கிராம் கடுகு - ரூ. 2.

25 கிராம் சோம்பு - ரூ. 2.50

25 கிராம் மிளகு - ரூ. 5.50

25 கிராம் சீரகம் -ரூ. 5

10 கிராம் பட்டை- லவங்கம் - ரூ. 4

மொத்தம் - ரூ. 67.

இது மானிய விலையில் ரூ. 50க்கு ரேஷன் கடைகள் மூலம் விற்கப்படவுள்ளது.

தொடர்ந்து முதல்வர் கருணாநிதிசெய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். மின்வெட்டை மறைக்கத்தான் இந்த மளிகைப் பொருள் திட்டமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மின்வெட்டு இருந்தால்தானே மறைக்க வேண்டும்.
மின்வெட்டை மறைக்க வேண்டிய அவசியத்தில் தற்போது நான் இல்லையே. மின்சாரத்தை பயன்படுத்திக் கொண்டுதான் இந்த விளக்கொளியில் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். மின்சார விளக்குகள் எரிவது குருடர்களைத் தவிர எல்லோருக்கும் தெரியும்.

லீலாவதி கொலையாளிகள் விடுதலை சரியே!

லீலாவதி கொலையில் கைதான திமுகவினரை விடுதலை செய்வது குறித்த கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், லீலாவதி கொலை தொடர்பாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 4 பேரில் 3 பேர் மட்டுமே விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்களும் 7 ஆண்டு தண்டனையை அனுபவித்தவர்கள்.

இன்னொருவர் பரோலில் சென்றபோது சரியாக நடந்து கொள்ளாததால், அவரை விடுதலை செய்யவில்லை. லீலாவதி கொலையில் திமுகவினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சட்டசபையில் நான் அதனை ஏற்றுக் கொண்டு திமுகவாக இருந்தாலும் நடவடிக்ைக எடுப்பேன் என்றுசொல்லி, அவர்கள் திமுகவினராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது - திமுக ஆட்சியிலே.

அதிலே, திமுக அரசு வக்கீல்கள் ஆஜராகக் கூடாது, நாங்கள் சொல்கின்ற வக்கீல்தான் ஆஜராக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். அதையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொன்ன வக்கீலை வைத்து வழக்கு நடைபெற்று அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றார்.

அரசு கேபிள் டிவி ..?

சென்னையைத் தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அரசு கேபிள் டிவி செயல்படும். சென்னையில் மட்டும் கொஞ்ச நாளாகும்.

சட்டமன்றத்திற்கும் தேர்தலா...?

நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், அதைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்குத்தான் தேர்தல் நடக்கும்.

சென்னைக்கு தீவிரவாத ஆபத்தா...?

நல்லவேளையாக அப்படி எதுவும் வரவில்லை.

அக்டோபர் 2ம் தேதி முதல் அலுவலகங்களில், பொது இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி சொல்லியுள்ளாரே என்ற கேள்விக்கு, சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X