'மெட்ரோ டெரரிஸம்'-பிரதீபா கவலை

டெல்லி தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க ஆளுநர்களின் 2 நாள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தொடங்கியது. மாநாட்டில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பேசியதாவது:
டெல்லியில் நடந்த தாக்குதல் மக்கள் மனதை விட்டு அகலவில்லை. பெரு நகரங்கள் மீது நடத்தப்படும் மெட்ரோ டெரரிஸம் கவலை அளிக்கிறது. மத்திய மாநில அரசுகள் துப்பாக்கி கலாசாரம், தீவிரவாதத்துக்கு எதிரான உறுதியான, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்வதுதான் நாட்டின் தற்போதைய பெரிய சவாலாக உள்ளது. வெளிநாட்டு சக்திகள் பல்வேறு குறிக்கோள்களுடன் நம் மீது தாக்குதல் நடத்தி ஆட்டுவிக்கின்றன. தீவிரவாத அமைப்புகள் பரஸ்பர ஆதரவுடன் செயல்படுகின்றன.
எல்லையில் ஊடுருவலும் நமது பாதுகாப்புக்கும் ஒருமைபாட்டுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நக்ஸலைட்டுகளின் பரவல் பெரிய பிரச்சனையாக உள்ளது என்றார்.
இந்த மாநாட்டில் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர் ஷரத் பவார், ஊரக வளர்ச்சி அமைச்சர் ரக்வன்ஷ் பிரசாத் சிங் மற்றும் 28 மாநில ஆளுநர்கள் மற்றும் 3 துணை நிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications