ட்ராபிக் வார்டன்கள் தகராறு: விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்திலுள்ள துணி கடை ஊழியருக்கும், டிராபிக் வார்டன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் உள்ள துணி கடை உள்ளது. இந்த கடையின் ஊழியர் அருண் டேனியல். விமான நிலையத்தில் டிராபிக் வார்டன்கள் ஸ்ரீகாந்த் மற்றும் சுபாஷ் ஆகியோர் அந்த துணி கடைக்கு சென்றனர். இருவரும் தலா 2 சட்டைகள் வாங்கினர். அதற்குரிய பணத்தை தராமல் இருவரும் புறப்பட்டுள்ளனர்.
சட்டைகளுக்குரிய பணத்தை தருமாறு அருண் டேனியல் கேட்டுள்ளார். அதற்கு தரமுடியாது என்று ட்ராபிக் வார்டன்கள் கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சட்டைகளை பிடுங்குவதற்கு அருண் முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ட்ராபிக் வார்டன்கள் அருணை தாக்கியுள்ளனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் போலீஸில் புகார் செய்தனர். விரைந்து வந்த போலீஸார் அவர்களை சமரசம் செய்து விசாரித்து வருகின்றனர்.
டிராபிக் வார்டன் ஸ்ரீகாந்த் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அங்குள்ள கடைக்காரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications