மதுரையில் அரசியல் சட்டம் இல்லை, அழகிரி சட்டம் தான்: தா.பாண்டியன்
மதுரை: மதுரையில் இந்திய அரசியல் சட்டம் சுத்தமாக அமலில் இல்லை. அங்கு தனிச் சட்டம்தான் (அழகிரி??) ஆட்சி புரிகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மதுரை பசுமலை தியாகராஜர் காலனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைத் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தா.பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இங்குள்ள குடியிருப்பில் கடந்த 1954ம் ஆண்டு முதலே மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள குடியிருப்பில் ஆளுங்கட்சியினர், காவல்துறையினர் உதவியுடன் அத்துமீறி நுழைந்து தனியாருக்கு இந்த இடங்களை விற்க முயற்சிக்கின்றனர்.
மக்கள் வளர்த்து வந்த பெரிய பெரிய மரங்களையெல்லாம் ஒரே நாளில் வெட்டி எடுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். யார் வெட்டினார்கள், யார் அப்புறப்படுத்தினார்கள் என்பதெல்லாம் காவல்துறைக்குத் தெரியும். யார் இங்குள்ள மக்களை மிரட்டுகிறார்கள் என்பதும் காவல்துறைக்குத் தெரியும்.
ஆனால் இங்கு இந்திய அரசியல் சட்டம் இல்லை. தனிச் சட்டம்தான் அமலில் உள்ளது.
கேபிள்டிவி ஆபரேட்டர்கள் மக்கள் விரும்புகிற சானல்களை ஒளிபரப்ப முடியாத நிலை உள்ளது.அவர்களை காவல்துறை மிரட்டுகிறது. இது கண்டனத்துக்குரியது.
வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடம் பெறும் கூட்டணியில் இடதுசாரிகள் இடம் பெற மாட்டார்கள் என்றார் தா.பாண்டியன்.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம்:
முன்னதாக நாகப்பட்டனத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைக்கு ராணுவ ரீதியாக எந்த வித உதவியையும் இந்திய அரசு செய்யக் கூடாது. உணவு தானியம் உள்பட மருந்துகள் கூட கொடுக்க கூடாது.
இந்தியாவில் பண வீக்கம் குறைந்துள்ளதாக சொல்ல முடிகிறதே தவிர, விலைவாசி குறைத்திருப்பதாக மத்திய அரசால் உறுதிபடுத்த முடியவில்லை.
தமிழக அரசியலை பொறுத்த வரை காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நிலவுகின்ற மின் வெட்டு, விலை வாசி உயர்வு ஆகியவற்றால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சாதகமான நிலை இருக்காது.
மின் வெட்டு பற்றிய விவரம் தெரியாமல் பேசுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் 2012க்குள் 16 மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க உள்ளதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதே போல தமிழக அரசு செய்த முயற்சிகள் என்ன என்பதை முதல்வர் கருணாநிதி விளக்க வேண்டும். திருச்சி பாய்லர் தொழிற்சாலையில் 1998க்கு பிறகு ஒரு கருவியையாவது தமிழக அரசு வாங்கியது உண்டா? என்று கேட்டார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications