லீலாவதி கொலையாளிகள் விடுவிப்பு-சிபிஎம் எதி்ர்ப்பு
சென்னை: மதுரை பெண் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
(லீலாவதியை கொலை வழக்கில் கைதானவர்கள் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது)
வரதராஜன் எழுதியுள்ள கடிதத்தில்,
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதிலும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 1405 கைதிகளுக்கு அவர்களின் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது தொடர்பாக ஒரு விஷயத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறோம்.
இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, சிறைக் கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பை அறிவிப்பது என்பது மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒன்றுதான். எனினும் இப்படிப்பட்ட தண்டனைக் குறைப்புச் சலுகையைத் தொழில்முறைக் குற்றம் புரிபவர்கள், நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள்,
அரசியல் காரணங்களுக்காகக் கொலைச் செயல்களை நடத்துபவர்கள் போன்றவர்களுக்கு நீடிப்பது முறையாகாது என்பது பல கட்டங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளில் கூட வெளியாகியுள்ள ஓர் ஆழமான பிரச்சனையாகும்.
இப்போதைய மாநில அரசின் முடிவு, எங்கள் கட்சியின் மதுரை மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடியதன் காரணமாக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொலை செய்யப்பட்ட திருமதி. லீலாவதி தொடர்பான வழக்கில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மூவர் விடுதலை செய்யப்பட இடமளித்தது என்பது வேதனைக்குரியதாகும். இந்த நிகழ்வு எங்களது கட்சித் தோழர்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே, லீலாவதி வழக்கில் தண்டனைக்கு உள்ளாகியவர்களுக்கு மாநில அரசின் தண்டனைக் குறைப்பு உத்தரவை ரத்து செய்யுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
'பெண்கள் மனதைப் புண்படுத்தும்':
இதேபோல, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் என்.அமிர்தம், மாநில பொதுச்செயலாளர் உ.வாசுகி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி மாநிலம் முழுவதிலும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 1405 கைதிகளுக்கு தண்டனை காலத்தை குறைத்து விடுதலை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்களில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தீவிர ஊழியராகவும், சிபிஐ(எம்)ன் மதுரை மாமன்ற உறுப்பினராகவும் இருந்து நேர்மையாக செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடிய திருமதி லீலாவதியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடூரமான முறையில் படுகொலை செய்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மூவரும் அடங்குவர் என்பது வேதனைக்குரியதும், அதிர்ச்சியளிப்பதுமாகும்.
இந்த நிகழ்வு தமிழகத்தில் மாதர் இயக்கத்தில் உள்ள லட்சோபலட்சம் பெண்களின் மனதை மட்டுமல்ல; அரசியலில் பெண்கள் வருகையை ஊக்கப்படுத்த விரும்பும் ஜனநாயக எண்ணம் கொண்டோரின் மனதையும் புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
திட்டமிட்டு அரசியல் கொலை புரிந்த கொலையாளிகளுக்கு மாநில அரசு தண்டனை குறைப்பை அறிவிக்கக் கூடாது.
எனவே, லீலாவதி வழக்கில் தண்டனைக்கு உள்ளாகியவர்களுக்கு மாநில அரசின் தண்டனைக் குறைப்பு உத்தரவை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications