உத்தப்புரத்தில் மீண்டும் ஜாதிக் கலவரம் - குண்டு வீச்சு
மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் மீண்டும் ஜாதிக் கலவரம் மூண்டுள்ளது. நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதலில் ஈடுபட்டதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். கல்வீச்சில் இரு அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன.
மதுரை அருகே உள்ளது உத்தப்புரம். இங்கு தலித் மக்களுக்கும், பிள்ளைமார் சமூகத்திற்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து பிள்ளைமார் சமூகத்தினர், தங்களது இடத்தில் தடுப்புச் சுவர் கட்டி தலித் மக்கள் தங்களது பகுதிக்குள் நுழையால் தடுத்து விட்டனர்.
இந்த தீண்டாமைச் சுவர் பல ஆண்டுகளாக அவமானச் சின்னமாக இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு இந்த சுவரை இடிக்க வேண்டும் என்று கோரி தலித் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நேரில் வந்து சம்பவ கிராமத்தைப் பார்வையிட்டார்.
சுவரை இடிக்கக் கூடாது என பிள்ளைமார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்து ஊரைக் காலி செய்து விட்டு மலையில் குடியேறி போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு பகுதி சுவர் இடிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சலசலப்பு பின்னர் ஒரு வழியாக அடங்கியது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. சுவர் அகற்றப்பட்ட இடத்தை தலித்கள் ஆக்கிரமித்ததாக கூறி பிள்ளைமார் சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டு திருமணம் தொடர்பாக சீர்வரிசை எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சுவரை இடித்து புதிதாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் கற்களை வீசி மோதிக் கொண்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பானது.
உடனடியாக போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த மோதலில் ஒருபோலீஸ்காரர் காயமடைந்தார். இரு அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மீண்டும் மோதல் வெடிக்காமல் தடுக்க கூடுதல் போலீஸார் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications