ஐ.சி.எல்லில் புதிய அணி-'டாக்கா வாரியர்ஸ்'!
டெல்லி: கபில்தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில், வங்கதேசத்தின் முன்னணி வீரர்கள் அடங்கிய டாக்கா வாரியர்ஸ் என்கிற புது அணி இணைந்துள்ளது. இது ஐசிஎல்லின் 9வது அணியாகும்.
கபில் தேவ் தலைமையில் இயங்கி வரும் ஐசிஎல்லில் இதுவரை 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதன் முதல் 20-20 போட்டித் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் அக்டோபர் 10ம் தேதி முதல் இரண்டாவது சீசனைத் தொடங்குகிறது ஐசிஎல். டெல்லி, கர்கான், அகமதாபாத், பன்ச்குலா ஆகிய நான்கு நகரங்களில்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் ஐசிஎல்லின் 9வது அணியாக இணைந்துள்ளது டாக்கா வாரியர்ஸ். இது வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்நாட்டைச் சேர்ந்த 12 முன்னணி வீரர்கள் ஐசிஎல் அணியில் இணையவுள்ளதுதான்.
இந்த நிலையில் டாக்கா வாரியர்ஸ் அணியை கபில்தேவ் நேற்று செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். இந்த அணியின் கேப்டனாக முன்னாள் வங்கதேச கேப்டன் ஹபிப் உல் பாஷர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்சியாளராக 1983 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த பி.எஸ்.சந்து அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில், கடந்த ஆண்டு லாகூர் பாட்ஷாவை அழைத்து வந்தோம். இந்த ஆண்டு டாக்கா வாரியர்ஸ் அணியை அறிமுகப்படுத்துகிறோம். அடுத்த ஆண்டு மேலும் பல வெளிநாட்டு அணிகளைக் கொண்டுவரவுள்ளோம். நாளுக்கு நாள் நாங்கள் விரிவடைந்து வருகிறோம் என்றார்.
டாக்கா வாரியர்ஸ் அணியில், மொத்தம் 13 வீரர்கள் இருப்பார்கள். இவர்களில் பாஷர் மற்றும் தற்போதைய வங்கதேச அணியில் உள்ள ஷஹாரியார் நபீஸ், திமன் கோஷ் மற்றும் அலோக் கபாலி ஆகியோரை கபில்தேவ் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
டுவென்டி - 20 சீரிஸ் தவிர டாக்கா வாரியர்ஸ் அணி நவம்பர் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள ஐசிஎல் உலக சீரிஸ் தொடரில் ஐசிஎல் வங்கதேசம் என்ற பெயரில் விளையாடுவர்.
டாக்கா வாரியர்ஸில் இடம் பெற்றுள்ள பிற வீரர்கள் - அப்தாப் அகமது, பர்ஹாத் ரெஸாஸ, மஞ்சுருள் இஸ்லாம், மபூத் செளத்ரி, மஹபூப் உல் கரீம், முகம்மது ரபீக், முகம்மது ஷெரீப், முஷாரப் ஹுசேன், தபஷ் பைஸ்யா.
இவர்களில் பாஷர், அப்தாப் அகமது, பர்ஹாத் ரெஸா, முஷாரப் ஹுசேன், திமான் கோஷ், ஷஹாரியார் நபீஸ் ஆகியோர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல் ெதரிவித்து விட்டனர்.
இவர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.