'தீவிரவாதம்'-தனி புலனாய்வு பிரிவு: மொய்லி பரிந்துரை
டெல்லி:தீவிரவாதத்தை ஒடுக்கும் வகையில் அதிக அதிகாரம் கொண்டு கடுமையான சட்டங்கள் தேவை. தீவிரவாதத்தை ஒடுக்க சிபிஐ போல தேசிய அளவில் ஒரு தனி புலனாய்வுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்த ஆணையத் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
பெங்களூர், அகமதாபாத்த்தைத் தொடர்ந்து டெல்லியில் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையை காட்டி பீதி ஏற்படுத்தியுள்ளனர். இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று ஆளுநர் மாநாடு தொடங்கியது. குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், உள்நாட்டு பாதுகாப்பு, ஊடுருவல், நக்ஸல்கள் பிரச்சனை குறி்த்து பேசினார். உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் நாட்டில் தொடரும் பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான கடுமையான சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று உள்ளிட்ட பரிந்துரைகளை நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி சமர்பித்துள்ளார்.
அந்த அறிக்கையை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக சீர்திருத்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு பெரும்பாலும் நிறைவேற்றிவிடும். பரிந்துரை அறிக்கை குறித்து ஆணைய தலைவர் வீரப்ப மொய்லி கூறியதாவது:
நாட்டில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்களை ஒடுக்குவதற்கு ஏற்ப தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. பயங்கரவாதத்தை ஒடுக்க அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாதபடி இந்த சட்டம் இருக்க வேண்டும்.
பயங்கரவாதம் குறித்து விசாரணை நடத்த தேசிய அளவிலான பெடரல் அமைப்பு அவசியம். இதை சிபிஐயில் தனிப்பிரிவாக ஏற்படுத்தலாம். நன்கு பயிற்சி பெற்றவர்களை இந்த பிரிவில் இடம் பெற வேண்டும். இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு எப்படி நிதி கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து பண பரிமாற்றத்தை தடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க 1980ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ச்ட்டத்தில் இதுபோன்ற புதுவழிமுறைகளை சேர்த்துக் கொள்ளும் வகையில் சட்டரீதியான வழி உள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்க பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பாஜக கூறுகிறது. ஆனால் பொடா தேவையில்லை. பொடா போன்ற சட்டங்கள் அவ்வளவு கடுமையானவை அல்ல. தீவிரவாத விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உண்மையல்ல என்றார்.