3 பேர் கொலை: 17 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை: விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளம் நீதிமன்ற வளாகத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓலைப்பட்டியை சேர்ந்தவர் வீரபெருமாள். இவருக்கும் சிறுமேனி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
இது தொடர்பான வழக்கு விளாத்திக்குளம் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 1991ம் ஆண்டு நீதிமன்றத்துக்கு வீரபெருமாள், மாடசாமி, கரும்புள்ளி, ஆகியோரை விளாத்திகுளம் போலீஸார் அழைத்து வந்தனர்.
அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று நீதிமன்ற வளாகத்திலேயே வீரபெருமாள், மாடசாமி, கரும்புள்ளி, ஆகியோரை கொலை செய்தது.
இது குறித்து விசாரித்த போலீஸார் சிறுமேனி, பரமசிவம், முருகேசன், முத்துமுனி, கந்தசாமி, லட்சுமணப் பெருமாள், சோலையப்பன், லிங்கம், கோவிந்தன், நாராயணன், முருகேசன், கணேசன், சண்முகம், ராமலிங்கம், மாரிமுத்து, மாரிமுத்து, வேல்முருகன், பெருமாள் ஆகிய 18 பேரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட விரைவு நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், சத்தியநாராயணன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர். இதில் பெருமாள் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications