வாட்டர் ஹீட்டர் ஆலையில் தீ-ரூ.35 கோடி நஷ்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள வாட்டர் ஹீட்டர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 35 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகில் செந்திலாம்பண்ணையில் வீனஸ் வாட்டர் ஹீட்டர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் சுப்பையா. இந்த தொழிற்சாலையில் 185 பேர் பணிபுரிகின்றனர்.
தொழிற்சாலையின் பேக்கிங் பிரிவில் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பாலியுரேத்தின் என்ற ரசாயனம் இருந்தது. அதன் மீது தீப்பொறி சிதறியது. அதிலிருந்து உடனே தீப்பிடித்து வேகமாக பரவியது.
இதை பார்த்த ஊழியர்கள் தொழிற்சாலை தொடர்பான முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு தப்பி வெளியே ஓடினர். அதற்குள் தீ மளமளவென பரவியது. இதில் 4,000 வாட்டர் ஹீட்டர்கள், இயந்திரங்கள், பெட்டிகள் உள்பட பல பொருட்கள் எரிந்து சாம்பலாயின. கட்டடமும் எரிந்து நாசமடைந்தது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் போராடி தீயை அணைத்தனர். நேற்று இரவு வரை தீயை அணைக்கும் பணி நடந்தது. மொத்த சேதம் ரூ.35 கோடி இன்று போலீஸார் தெரிவித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதுமில்லை.












Click it and Unblock the Notifications