செங்கோட்டை-புனலூர் அகலப் பாதை: இன்று ஆய்வு
செங்கோட்டை: செங்கோட்டை-புனலூர் மலைப் பாதையில் அகல ரயில் பாதை அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு செய்கிறார்
விருதுநகர்-தென்காசி, நெல்லை-திருச்செந்தூர், கொல்லம் அகல ரயில் பாதை திட்டம் கடந்த 1997-98ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 357 கிமீ தூரம் கொண்ட இத்திட்டம் ரூ.327 கோடி மதிப்பீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் விருதுநகர் முதல் செங்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்துவிட்டது. தற்போது செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் முக்கிய பகுதியாக செங்கோட்டை-புனலூர் மலைப் பாதை கருதப்படுகிறது. இந்த பாதையில் ஏராளமான வளைவுகளும், குகைகளும் உள்ளன. இப்பாதையில் சில மாற்றங்கள் செய்யப்படுமேன ரயில்வே பொது மேலாளர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா இன்று ஆய்வு செய்கிறார். இதற்காக செங்கோட்டையில் இருந்து புனலூருக்கு சிறப்பு ரயிலில் அவர் செல்கிறார்.