டெல்லியில் என்கெளன்டர்: தீவிரவாதி உள்பட 2 பேர் பலி!
டெல்லி: தெற்கு டெல்லியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீஸார் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.
ஜாமியா நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான ஆதிக் என்பவர் டெல்லி மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி சிறப்புப் பிரிவு இணை ஆணையர் கர்னைல் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அபு பாஷர் நேற்று குஜராத் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு வரவழைக்கப்பட்டான்.
அவனிடம் நடத்திய விசாரணையின்போது டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.
ஜாமியா நகரில் உள்ள ஒரு மசூதி அருகே இருக்கும் நான்கு மாடிக் கட்டடத்தில் ஆதிக் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அவன் தெரிவித்தான்.
கடந்த ஜூலை மாதம் இங்குதான் பாஷரும், இந்தியன் முஜாஹிதீன் தலைவரான தெளகீர் எனப்படும் முகம்மது சுபான் குரேஷியும் தங்கியிருந்ததாகவும் பாஷர் தெரிவித்திருந்தான்.
ஆதிக்குக்கு டெல்லி மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்பு உள்ளது.
ஆதிக் மற்றும் இன்னொரு தீவிரவாதி தங்கியிருப்பது குறித்து தெரிய வந்ததும் அங்கு போலீஸ் படை விரைந்தது. மோகன் சந்த் சர்மா தலைமையிலான போலீஸ் படை அங்கு பதுங்கியிருந்தவர்களைப் பிடிக்க முயன்றது.
அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். பதிலுக்கு போலீஸாரும் சுட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் ஆதிக் உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவன் பிடிபட்டான். மற்ற இருவர் தப்பி விட்டனர்.
இந்த என்கெளன்டரில் இன்ஸ்பெக்டர் சர்மா, ஒரு ஏட்டு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. சர்மாவுக்கு வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications