நீதிமன்றத்திலிருந்து சுபாஷ் பண்ணையார் தப்பியோட்டம்
நெல்லை: பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையார் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் என்ற சுபாஷ் பண்ணையார்.
கடந்த 2006ம் ஆண்டு எப்போதும்வென்றான் அருகே தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது தொடர்பாக எப்போதும்வென்றான் காவல்நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது.
இது தவிர ஆறுமுகநேரி, ஆத்தூர் காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சுபாஷ் பண்ணையார் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சுபாஷ் பண்ணையார் 2வது செசன்ஸ் கோர்ட்டில் சரணடைந்தார். அவருக்கு 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கிய நீதிபதி சரவணன், ஜெசிந்தா பாண்டியன் கொலை வழக்கில் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சுபாஷ் பண்ணையார் நெல்லை குற்றவியல் 3ம் எண் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் திடீரென தப்பியோடிவிட்டார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோர்ட் ஊழியர் சுந்தர்ராஜ் என்பவர் பாளை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தப்பியோடிய சுபாஷ் பண்ணையாரை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications