'தாக்குதல்': பாக்.-யுஎஸ் தளபதிகள் சந்திப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் அமெரிக்க ராணுவ தளபதி பேச்சு நடத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிராந்தியத்திற்குள்ளும் புகுந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகளும், சில அப்பாவிகளும் உயிரிழந்து வருகின்றனர். அமெரிக்க படையினரின் இந்த தாக்குதலுக்கு அதிபர் புஷ் ஏற்கனவே உத்தரவு கொடுத்துள்ளார். இதுவரை வான் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் தற்போது நில மார்க்கமாகவும் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கி வருகின்றன.
இதனால் பாகிஸ்தான் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க படைகளின் செயலை கடுமையாக பாகிஸ்தான் அரசு, அமெரிக்க படையினர் அத்துமீறி நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.
இந்தப் பின்னணியில் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி மைக் முல்லன் இஸ்லாமாபாத் வந்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானியை சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை திடீரென இஸ்லாமாபாத் வந்தார் முல்லன். முதலில் பிரதமர் யூசுப் ரஸா கிலானியை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானியையும் அவர் சந்தித்தார்.
அப்போது, பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படவும் அமெரிக்கா விரும்புகிறது. இரு நாட்டுக்கும் சவாலாக உள்ள விஷயங்களில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவே அமெரிக்கா விரும்புகிறது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், சாதகமான போக்கிலும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்ததாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செயல்பாட்டை பாராட்டிய முல்லன், பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தாராம்.
முல்லன் சந்திப்பின்போது, பாகிஸ்தான் பிராந்தியத்திற்குள் அமெரிக்க படைகள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு கயானி எதிர்ப்பு தெரிவித்தார். பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், தீவிரவாதிகளுக்கு எதிரான போர் குறித்தும் இருதளபதிகளும் விவாதித்தனர்.
இருப்பினும் பாகிஸ்தான் பிராந்தியத்திற்குள் அமெரிக்க படைகள் தாக்குவது தொடர்பாக இரு தளபதிகளுக்கும் இடையே எந்தவித உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை என்று கயானி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து கயானி கூறுகையில், பாகிஸ்தான் பிராந்தியத்திற்குள் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தாக்குதல் நடத்தும் முழு அதிகாரமும் பாகிஸ்தான் படைகளுக்கு மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க படைகள் உள்ளே வந்து தாக்குதல் நடத்துவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
அமெரிக்க தளபதி முல்லன், பாகிஸ்தான் ராணுவ இணை தளபதி தாரிக் மஜீத்தையும், பிற அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications